Pages

Saturday, April 09, 2005

தனிமை

நாவாந்துறை டானியல்ஜீவா-


தனித்து விடப்பட்ட
தீவில் நான்
ஒரு வசந்தத்தின்
தேடலுக்காக....

உண்மையான
உலகத்தைத்தேடி
பொய்யான முகங்களிற்குள்
புதைந்து போனேன்.

சொல்லிதயங்களெல்லாம்
நல்லிதயங்களில்லாதல்
நளிந்தும்....
மெலிந்தும் போனேன்.

விரக்தி என்னிடம்
விடாப்பிடியாய்;
என் கூடவா ....
தங்கிவிடப் போகிறது.

அதுவரை
கவிதையோடு
கைகுலுக்குவேன்
வாழ்தலுக்காய்
விழிப்பாயிருந்து
பூமியை
பண்போடு நேசிப்பேன்.

என்னில்
எதைச்சுமத்தினாலும்
யேசுவைப்போல்
சிலுவை சுமப்பேன்.

கண்களில் கண்ணீர்
வடிந்தாலும்
என் உடல் காயப்பட்டு
ஊரெங்கும் வீசுகின்ற
காற்றில் பதிவானாலும்
கனத்தால்
என் தோல்கள்
வலி எடுத்தாலும்
என்னொருவரிடம்
என் சுமையை
இறக்காமல் இருப்பேன்.

தென்றல் தாலாட்ட
மறந்தாலும்
மேகம் என்னைப்பார்த்து
மட்டம் தட்டினாலும்
சூரியன் கொஞ்சம் கூட
இரக்கமின்றி
சுட்டெரித்தாலும்
வெண்ணிலா
என்னை வெறுத்தாலும்
நான் வாழ்தலுக்காக
வரித்துக் கொண்ட
கொள்கையில்
வரிகூட விலகாமலிருப்பேன்.

பூருவம்....
வெருவின்றி
இடியோடு வந்திறங்கினாலும்
சுக்கிலமிக்கவன்
சாக்கடையாகன்.

புயல் வந்து
என் தேகத்தை
பயம்கொள்ள வைக்க
நினைத்தாலும்
கூளான் அல்ல
குப்பறப் படுப்பதற்கு
வைரமான கரும்பாறை.

மின்னுக்குள்
என் உயிர்
பொசுகும் வரை....
வாழ்க்கையை நேசிப்பேன்
அது எப்படியிருந்தாலும்
பரவாயில்லை.

No comments: