Pages

Wednesday, December 05, 2007

வலை

நூல்: வலை (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர்: டானியல் அன்ரனி
பதிப்பகம்: சுரபி பதிப்பகம், 267 நாவலர் வீதி, யாழ்ப்பாணம்
பதிப்பு: இரண்டாம் பதிப்பு ஜூன் 2005.



'வலை' பற்றி: ஈழத்துச் சிறுகதை உலகில் தனது குறுகிய கால வாழ்வில் தனது முத்திரையைப் பதித்துச் சென்றவர் எழுத்தாளர் டானியல் அன்ரனி. அவரது ஆளுமையின் வெளிப்பாடே 'வலை'யென்னும் இச்சிறுகதைத் தொகுப்பு. கடற்றொழிலாளர்களின் இருப்பியற் பிரச்சினைகளை, சமுதாய, அரசியற், பொருளியற் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளிவை. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையுலகில் எழுத்தாளர் டானியல் அன்ரனிக்கு முக்கியமானதோர் இடமுண்டு என்பதைப் புலப்படுத்தி நிற்கின்றன இச்சிறுகதைகள் டானியல் அனரனியின் 'வலை'!

சமர் இலக்கிய வட்ட வெளியீடாக 1987 ஜனவரியில் வெளிவந்த டானியல் அன்ரனியின் 'வலை' சிறுகதைத்தொகுதியின் இரண்டாம்
பதிப்பு தற்பொழுது வெளிவருகிறது. இத்தொகுதியில் வெளிவந்த சிறுகதைகளனைத்தும் அவ்வப்பொழுது பத்திரிகைகள், சஞ்சிகைகள்
என்பவற்றில் வெளிவந்தவை. வெறும் கற்பனையாகவில்லாது, நம்பகத்தன்மையும், வாழ்நிலைஅனுபவங்களின் வெளிப்பாடும்
இக்கதைகளின் சிறப்பியல்புகளாகும். சிறுகதைகளின் நிகழ்களம் நாவாந்துறையே ஆயினும் பெரும்பாலான கடலோரக் கிராமங்களின் கதையும் அதுவேயாயென்ற பொதுமைப் பண்புக்காரணமாக இச்சிறுகதைகள் வலுவான தளத்தைப் பெறுகின்றன. அடிநிலை மக்களின் ஏழ்மையும், அதனால் ஏற்படுகிற அவலங்களுமே இச்சிறுகதைகளின் கருவாகும். எடுத்துரைப்பு வடிவமும், அதன் மொழிவழி வெளிப்பாடும், இயல்பானதாய்க் காணப்படுகிறது. [ நூல் முன்னுரையில் சோ.கிருஷ்ணராசா].



அன்ரனிக்குச் சிறுகதை பற்றிய தெளிவு இருந்தது; அதைப் படைக்கும் ஆற்றலும் நிறைந்திருந்தது. இவற்றிற்குச் சான்றாய் அமைபவை இத்தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளுமே. ஒன்பது முதற்பதிப்பிலும் ஒன்று பின்னர் 'வெளிச்சத்திலும்' வெளியானவை. உருவம்,
உள்ளடக்கம் இரண்டும் உயிரும் உடலுமாய்ப் பேதமற்றுப் பிணைந்துலவும் உயிரிகள் அவன் ஆக்கங்கள். அன்ரனி தீவிர சமூக அக்கறை கொண்ட மனிதன். வாய்ச்சொல் வீரனாகவன்றி செயற்பாட்டாளனாகத் திகழ்ந்தவன்......

எந்த விஷயத்தை எந்தக் கோணத்தில் சொன்னால் அது சிறுகதையாகும் என்பதற்கும் உதாரணங்கள் இக்கதைகள். அலம்பல், சிலும்பல்கள் இல்லாத செதுக்கல்கள்.

குறிப்பாக சொல்லவேண்டிய இன்னுமொன்று அனரனியின் நடை. போலி அலங்காரம், பூச்சு-வேஷமற்ற, இய்லபான- எளிமையும் உறுதியும் வாய்ந்த - நேரடி நடை. அனரனியைப் போலவே அவன் மொழிநடையும் அதற்கேற்ற சொல்லாட்சி, யாழ் மண்ணுக்கேயுரிய, நாவாந்துறைக் கடலின் உவர்க்காற்றிலூறிய சொற்கள் ஆயிரம் இத் தொகுதி முழுவதும்.

அதேபோல, இந்த வலையிலகப்பட்ட மாந்தர் யாவருமே கடலோர மண்ணிற் காலூன்றிக் காறறோடும் அலையோடும் தம் விதியோடும் இச்சமூக அமைப்போடும் ஓய்வின்றிப் போராடும் மெய்யான மனிதர்கள்.

மனித நேயம், நியாய உணர்வு, பரந்த நோக்கு, போர்க்குணம் - இவையும்; இவற்றிற்கு மேலாகக் கலையாற்றலும் மிளிர வாழ்ந்தவன் அன்ரனி. அதை, இத்தொகுதியிலுள்ள கதைகள் அனைத்துமே உரத்து எதிரொலிக்கும்.

ஈழத் தமிழ்ச் சிறுகதை பற்றிப் பேசப் புகுவோர் எவருமே புறந்தள்ள இயலாத ஒரு கதை 'ஒரு வெறும் மனிதனின் மரணம்'. ஆனால் அனரனியின் அந்த அகால மரணம் ஒரு வெறும் மனிதனின் மரணம் அன்று. - [முன்னுரையில் எழுத்தாளர் ஐ.சாந்தன்].

மேற்படி நூலினைப் பற்றிய மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் கனடாவில் வசிக்கும் அவரது சகோதரர் எழுத்தாளர் டானியல் ஜீவாவுடனும் danieljeeva@rogers.com என்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

(நன்றி - பதிவுகள்)