Pages

Monday, May 17, 2010

கல்லறையிலிருந்து ஒரு குரல்

டானியல்ஜீவா
நான் சேர வேண்டிய
இடத்திற்கு வந்து விட்டேன்.
நீ தான் இன்னும்
வரவில்லை

நீ என்னிடம்
இல்லை யென்பதை
ஏற்றுக் கொள்ள
என் மனசு மறுக்கிறது.

நள்ளிரவுக் கதவை
மூர்க்கமாய்த் தட்டும்
காமம்…
திரும்பிப் பார்த்தால்
நீயிருக்கவில்லை.

சிறகு முளைத்த கணமே
பயணித்தேன்;
நான் வீழ்ந்த கதை
உனக்கு
தெரியாமலே
போய் விட்டது.

தீயின் கீழிருந்த
என் வீட்டிலிருந்து
புறப்பட்டேன்
பனிமுடிய நதியைக் கடந்து

தனிமையில்
தனித்திருந்தேன்
முடியாமலிருந்தது.
உன்னோடு இருந்தேன்
இறப்பின் ரகசியம்
என்னோடு இருந்தது

உன்னால்
என் உயிர்
கொஞ்சம் கொஞ்சமாய்
இறந்து கொண்டிருந்தது
அப்போதும்
நீ வருவதாக இருந்தது
ஆயினும் வரவில்லை

மனசுடைந்து நதியில்
வீழ்ந்தேன்.
மரித்தோரிடமிருந்து
உயிர்த்தெழ மாட்டேன்
ஏனென்றால்
நான் மரித்து விட்டேன்.
நன்றி:கூர்2010

No comments: