Pages

Friday, May 21, 2010

குட்டான்

டானியல்ஜீவா


“இம்முறை காலம் இதழில் சினேகிதனை தொலைத்தவன் என்ற பொ. கருணாமூர்த்தியின் கதையும் குட்டான் என்ற டானியல் ஜீவாவின் கதையும் எனக்கு பிடித்துள்ளன. இதழை முற்றாக வாசித்து முடிக்காத நிலையில் மற்ற ஆக்கங்கள் பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை. ஆனால் ஜீவாவின் கதையில் கனடாவில் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் அனுபவித்திருக்க கூடிய ஒரே வீட்டில் பலர் சேர்ந்து குடியிருப்பதும் அதனால் வரும் சிக்கல்களும் காட்டப்படுகின்றன. கதையில் சாந்தா என்ற பாத்திரம் தன் வீட்டில் குடியிருக்கும் குட்டானை பற்றி தன் மாமியார் எல்லை மீறி பேசி வீட்டைவிட்டு வெளியேற சொல்லும்போது அதற்கு தன் எதிர்ப்பை காட்டுகின்றது. இதனை எதிர்கொள்ளாத மாமியார் குட்டானை நீ வச்சிருக்கிறாயா என்று கேட்பதுடன் கதை நிறைவேறுகிறது, எம் மனம் அரட்டப்படுகின்றது. பெண்களின் முதல் எதிரிகள் பெண்கள்தான் என்று அனேகமாய் எல்லா ஆண்களும் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம்.”
நன்றி: அருண்மொழிவர்மன்
http://solvathellamunmai.blogspot.com-(இனையத்தளத்திலிருந்து)

குட்டான்
டானியல்ஜீவா
விடிகாலை 6மணிக்கு எழுந்து வேலைக்கு நான் போனால் பின்னேரம் எப்பிடியும் வீடு வர ஒன்பது மணியாகிவிடும்.சில வேளையில் பிசி இல்லையென்றால் நேரத்தோடு அனுப்பி விடுவார்கள்.நான் இருக்கும் இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகி விட்டன.வீடு இருக்கும் வீதி தமிழர்களால் நிறைந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற உணர்வே மனதில் மேல் ஓங்கும்.நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இந்த மார்கழியோடு பதினைந்து வருடம் நிறைவு பெறுகின்றது.நான் இருக்கும் வீட்டுக்காரர் இரு வீடுகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார்கள்.ஸ்கபரோவில் இருக்கும் வீட்டில்தான் நான் இருக்கிறேன்.அடுத்த வீடு மார்க்கம் ஏரியாவில் தமிழர்கள் இல்லாத இடம்பார்த்து வாங்கியிருக்கிறார்கள்.இந்த வீட்டில் தெரிந்த தமிழ்ச் சனத்தை குடியமர்தியிருக்கிறார்கள்.அவர்களிடம் இருக்கும் இந்த இரு வீடு பற்றி கணவனும் மனைவியியும் புளுகித் தள்ளுவதில் தங்களது ஓய்வு நேரங்களைத் தொலைத்துக் கொண்டிருந்தார்கள்.நான் அவை எல்லாவற்றுக்கும் மறுப்புச் சொல்லாமல் “ம்” போடுவதை எனது போர் உத்திகளில் ஒன்றாகக் கருதினேன்.

வீட்டின் அறையில் நான் குடித்தனம் செய்ய வரமுன் இந்த அறையைப் பற்றித் தமிழ் பத்திகையில் “தளபாடத்துடன் கூடிய அறையொன்று வாடகைக்கு” என்றுதான் விளம்பரம் போடப்பட்டிருந்தது.அறையை வாடகைக்கு எடுத்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் “மரமஞ்சள்” அவிச்சு குடிக்க வேண்டிய நிலையென்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டியல்.கட்டிலின் நான்கு பக்கங்களிலிலும் கறல் கட்டிய கம்பியால் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது.சேர்த்துக் கட்டப்பட்டிருந்த கம்பியின் சிறிய பகுதிகள் வெளித்தள்ளப்பட்டு காணப்படும்.இந்த கம்பியிலேயே என் கால்களில் அடிக்கடி தட்டுப்பட்டு காயக் கீறல்களு; ஏற்ப்பட்டுக் கொண்டேயிருந்தது. மெத்தையில் என் உடல் சாய்ந்தால் ஏதோ ஒரு பள்ளத்திற்குள் தொப்பென விழுவது போன்ற ஒரு உணர்விலிருந்து என்னால் தப்பவே முடியவில்லை.
ஓரு கால் முறிஞ்ச பழைய மேசை, ஒரு பழைய கதிரை, சின்ன ரீப்போ இவைகளைத்தான் கனடாவில் தளபாடத்துடன் அறை வாடகைக்கு விடப்படும் என்று விளம்பரப்படுத்துவது வழக்கமாய்ப் போய்ச்சுதோ.

நான் இங்கு வந்த போது இருந்த மன நிலை படிப்படியாக மாறி இந்த வீட்டின் சொந்தக்காரர் குமார் எனக்கு நெருக்கமான நண்பராகிவிட்டார்.ஒவ்வொரு வெள்ளியிரவும் குடிப்பதிலேயே குமாருக்குஅந்த இரவு அழிந்து விடும்.நான் ஒரு அறையில்,அடுத்த அறையில் இன்னொரு பொடியன்.அவனும் காலப்போக்கில் எனக்கும் குமாருக்கும் நண்பனாகி விட்டான்.அவனுடைய பெயர் விநாயக மூர்த்தி.ஆனால் நானோ குமாரோ அல்லது குமாரின் வீட்டுக்காரரோ அவனை அப்படி அழைப்பதில்லை. மாறாகா “குட்டான்” என்றுதான் நாங்கள் எல்லோரும் அவனை அழைப்பது வழக்கம்.அவன்; மிகவும் குள்ளமாக இருப்பதே அவனை அப்படி அழைப்பதற்கு மிக முக்கியமான காரணமாய் இருக்கும்.அவனை ஆரம்பத்தில் குட்டான் என்று நாங்கள் அழைத்த போது அவன் கொஞ்சம் சங்கடப்பட்டாலும் காலப்போக்கில் அவன் விரும்பியோ விரும்பமாலோ அந்தப் பெயரே நிலைத்தது.

குமாரின் இரண்டு பிள்ளைகளும் சுறுசுறுப்பான சுபாவம் கொண்ட பிள்ளைகள்.தங்களுக்குள் ஆங்கிலத்திலேயே கதைத்துக் கொள்வார்கள்.அப்படி அவர்கள் கதைப்பது குமாரின் மனைவிக்கு பெருமையாக இருக்கும்.குமாரின் மனைவி சாந்தாவை நாங்கள் சாந்தாக்கா என்றுதான் அழைப்போம்.சாந்தாவிற்கு அவ்வளவாக ஆங்கிலம் பேசவோ எழுதவோ தெரியாவிட்டாலும் அரை, குறையாக ஆங்கிலத்தில் பிள்ளைகளோடு பேசுவதை எப்போதும் பெருமையாக நினைப்பாள்.வீட்டில் மொத்தமாக நான்கு அறைகள்.ஒர் அறையில் நானும,; மற்றைய அறையில் குட்டானும், இன்னொரு அறையில் குமாரின் அப்பாவும் அம்மாவும் மற்றைய அறையில் குமார் குடும்பமுமாய் அந்த வீடு
“கொழும்பு ஐலண்ட்” லொட்ச்சுப் போல இருக்கும்.
நான் சாப்பாட்டோடு நானூறு டொலர் மாதம் கொடுக்கிறேன். அது போல் குட்டானும் கொடுப்பான் என்றுதான் நினைக்கிறேன்.குமாரின் பெற்றோர் சமூக கொடுப்பனப் பணத்தில் சீவித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் குமாருக்கு மாதம் எவ்வளவு அவர்கள் கொடுக்கிறார்கள் என்பதைப் பற்றி இன்றுவரையும் எனக்கு தெரியவில்லை.

குமாரின் அம்மாவுக்கு கிட்டத்தட்ட அறுபது வயது இருக்கலாம்.ஆனால் நவநாகரீக மங்கை போலவே தோற்றம்.இரண்டு கைகளிலும் தங்க வளையல் அடுக்கப்பட்டிருக்கும்.மோதிரங்கள் மூன்று எப்போதும் விரல்களில் அலங்கரித்திருக்கும்.கண்களில் அஞ்சனம் அழகாய் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு நாளும் பூசுவதை மட்டும் மறப்பதில்லை. உதட்டில் சாயம் எப்போதும் உட்காந்திருக்கும்.உடையில் மேலேத்தேய நாகரீகம் தூக்கலாய் இருக்கும.;அடிக்கடி கண்ணாடி முன் நின்று சரிபார்க்கும் குமாரின் அம்மாவிற்கு நிறம் மட்டும் கறுப்பாக இருப்பதாக கவலை.ஆனாலும் வெளிப் பார்வைக்கு அவள் தன்னுடைய குறையாக அந்த நிறப் பிரச்சனையை என்றும் காட்டிக் கொள்வதில்லை.

இன்று வெள்ளிக்கிழமை நாள். வழமையான நாட்களிருந்து எங்களுக்கு இந்தநாள் வேறுபட்டே இருக்கும்.ஏனென்றால் இன்றுதான் வீட்டிலிருக்கும் எல்லோரும் ஒன்றாய் சந்திக்கும் நாள்.குமாரின் பெற்றோர்கள் நடுவிறந்தையில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் இருக்கும் “இத்தாலியன் லெதர் சோபா”வில் உட்கார்ந்து விட்டார்கள்.குமார் வேலை முடிந்து வருவதற்கு இன்னும் அரை மணித்தியாலம்தான் இருக்கின்றது.குட்டான் வேலை முடிந்து வந்து குளித்து விட்டு அவனுடைய அறைக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தான்.சாந்தா நல்ல வாசம் மூக்கைத் துளைக்கிற மாதிரி கறி சமைத்துக் கொண்டு குசினிக்குள் நின்றாள்.பொதுவாக நான் சாப்பிடுவதற்காக நடு விறாந்;;தைக்கு வரும் போது சாந்தா சோபாவில் இpருந்தால் குமாரின் பெற்றோர்கள் சாந்தாவுக்கு முன்னால் வந்து உட்க்கார மாட்டார்கள்.

நான் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டில் சாந்தாவைத் தவிர வேறு யாரும் வீட்டில் இருக்கவில்லை.அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாந்தா தன் நெஞ்சுக்குள் அடுக்கடுக்காய் சேமித்து வைத்த பிரச்சினைகளை வாய் விட்டுத் கொட்டித் தீர்த்தாள்.சாந்த எனக்குத் தன்னுடைய மாமா மாமி பற்றிச் சொன்ன குற்றச் சாட்டுக் கெல்லாம் “ம்” போட்டபடியே இருந்தேன்.சில பிரச்சினைகள் பற்றி கதைக்கும் போது குறுக்காக சாந்தாவிற்கு நோகாமல்; சில கேள்விகளையும் தொடுத்தேன்.பொதுவாக சாந்தாவின் உப்புச்; சப்பில்லாத நொண்டிச் சாட்டுகளில் எனக்கு உடன்பாடில்லை.நேற்று கேட்ட சில கேள்விகளுக்கு சாந்தா சொன்ன பதில்கள் வேடிக்கையோடு என் மனதில் இழையோடியது.

“அக்கா.. இங்கை மூதியோரை ஸ்பொன்சர் பண்ணி எடுத்தவங்க அவர்கள் வந்த பின் பொதுவாக கொடுமைப்படுத்துறங்க என்டுதான் பரவலாய் கதையிருக்கு. ஆனா நீங்க சொல்றதப் பார்த்தா உங்கட மாமி மாமாதான் உங்களை கொடுமைப் படுத்துவது போல இருக்கே..?என்று கேட்டதற்கு,
‘ம்’ பேந்தென்ன தம்பி..நீ இன்னம் கல்யாணம் பண்ணேலெயெண்ட அது உன்ர சொந்தப் பிரச்சினை அதேயேன் உன்னட்ட தோண்டித் தோண்டித் கிளறவேணும் இதிலயிருந்து அவங்கட குணத்தை நாங்க அறியேலாதா..?

சில வேள அவங்களுக்கு என்னுடைய வாழ்க்கையில அக்கறையிருக்கலாம்தானே...?
அவையளுக்கு உங்கட வாழ்க்கையில அக்கறையா..?இது மெய்யாத்தான் இருக்குமோ.. அது அவியட நடிப்பு..தன்ர சொந்தப் பிள்ளை படுகிற கஸ்டத்தையே உணராமல் இருக்குவினம்.அதுக்குள்ள உங்கட வாழ்க்கை பிரச்சினையிலையா அக்கறை வந்திருக்கும்.அவங்க சுபாப் புத்தியே மற்றவங்கட பிரச்சினையை தோண்டித் தோண்டித் கேட்கிறதுதான்... என்னைப் பாருங்களேன்.வேலை முடிஞ்சு வந்துசும்மா சோபாவில இருந்தால் குசினிக்குள் ஏதோ செய்யிற மாதிரி நிண்டு கொண்டு குத்தலாய் கதைப்பாள்…எத்தினை நாளைக்கெண்டுதான் நானும் பொறுத்துக் கொள்ள…அதென்ன தம்பி இந்த வயசிலேயேஅவியள் பட்டப் பகலியே அறையை பூட்டிக் கொண்டு புதுசாக கல்யாணம் செய்தவியள் மாதிரி ஆட்டம் போடுகினம் பேரப்பிள்ளையை கண்ட காலத்திலேயே இப்படியெண்டால் அந்தக் காலத்திலே எப்படி சோக்குப் பண்ணியிருப்பினம்?இதுக்குமேலே இரண்டு பேரும் குடியும் கும்மாளமும்...ச்சீ... எங்கட பரம்பரையிலேயே பொம்பிளைகள் குடிச்சதாய் இதுவரைக்கும் வரலாறு கிடையாது. இவையளுக்கு வெக்கம் மானம் ரோசம் கிடையாது.என்ர மனுசனையும் சேர்த்து வைச்சுக் கொண்டு குடிக்கினம்.இதன்ன அறுந்த குடும்பம்.தெரியாமல் வந்து விழுந்திட்டேன்.

ஒரு அடைமழை பெய்து ஒய்வெடுத்தது போல அவளுடைய வாயிலிருந்து வார்த்தைகள் தெறித்து அமைதியானள்.ஏன் அமைதியானல் என்பது எனக்கு புரியவில்லை.என்னைக் கதைக் விடமால் தானே வெடு வெடுத்துக் கதைத்துக் கொண்டிருந்தவள் ஏன் திடிரென உறை நிலையானள்.?ஒற்றைப் பின்னல் கூந்தல் மார்ப்பிக்கிடையில் நெளிந்து அழகுகிறிக்கிடந்தது.நெற்றியல் சிவப்பு நிலா..இரண்டு காதோரமும் முடி நீண்டு சுடுண்டு மடிந்து கிடந்தது.அது விரல்களால் சுருட்டி விடப்பட்டிருக்க வேண்டும். இப்படி சுருட்டி விடுகிற பழக்கம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபல்யம்.களுத்தில் தங்கத் தாலி அதன் மேல் முத்தமிட்டபடி மல்லிகை மொட்டு சங்கிலி கிடந்தது.மௌனம் போர்த்திக் கிடந்த முகத்தை எறிட்டு பார்த்தேன்.விக்கித்துப் போனேன்.கண்கள் சிவத்து மெல்ல மெல்ல கண்ணீர்; சிறு ஒடையாய் ஒடியது.

ஏன் சாந்த அக்கா அழுகிறியேள்..?
‘……..’
ஒன்னும் பதில் சொல்லாமலே இன்னும் விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.
நான் மீண்டும் கெஞ்சும் குரலில்
“என்னண்டு சொல்லிப் போட்டுத்தான் அழுங்கலன் அக்கா......?”என்றேன்.
அவள் எதுவும் பேசுவதாக தெரியவில்லை.நான் இதற்கு மேல் கதைக்காமல் என்னுடைய அறைக்கு போய் விட்டேன். கணணிக்கு முன்னால் நான் இருந்து இலங்கைச் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் நேற்று நடந்த இந்த நினைவும் வந்து தொலைந்தது

அறைக்குள் இருந்து நான் விறாந்தைக்கு வரவும் குட்டானும் வெளி விறாந்தைக்கு வரவும் சரியாக இருந்தது. நான் குட்டானை பார்த்துக் கொண்டு,
“என்னடா குட்டான் முகமெல்லாம் அதைச்சுப் போய்க்கிடக்கு…ஏன்ரா இரவெல்லாம் முழிச்சிருந்து தமிழ் நாடகங்கள் பார்த்தனீயோ..?”
“இல்லையடா மச்சான் இரவில இப்ப நெத்திரை வாறது குறைவாயிருக்கு..இப்ப புதுசா சேர்ந்த இரண்டாவது வேலை சரியான கஸ்டமட அதுதான் இரவில கொஞ்சம் நெத்திரை வரப்பஞ்சிப்படும்.அதாலாதான் மூஞ்சி அதைச்சுப் போய்க்கிடக்குது..என்ன செய்யிறது இங்க உழைக்கத்தனே வந்தனாங்க.உடம்பு ஏலும் மட்டும் அடிப்போம்…எங்கட கஸ்டத்தை மற்றவங்களுக்கு சொன்னாப் போல தரவா போறாங்க.”என்று சொல்லிக் கொண்டு பக்கத்தில் இருந்த சோபவில் உட்காந்தான்.
நான் சோபாவிற்கு பக்கத்தில் நின்று கொண்டிருக்க குமாரின் அம்மா என்னைப் பார்த்து@
“கொஞ்சம் இரன்தம்பி சோபவில்”என்று சொல்லவும் நான் சோபவில் உட்காந்து கொண்டேன்.
இஞ்ச பார்த்தீயளா குட்டான்ர கதையை நாங்க என்ன கேட்ட உதவி செய்ய மாட்டோமா?”
அவளுடைய இயல்பான கேளியும் கின்டலும் கலந்த குரலில் மனமுருகி கேட்பது போல் குமாரின் அம்மா கேட்டாள்.குட்டானுக்கு கோபம் வந்ததோ என்னவோ ஒரு குத்தலாக கதையைப் போட்டான். “நீங்களே பிச்சை எடுத்துக் கொண்டுருக்கிறீயள் அதுக்குள்ள எனக்கு உதவி செய்யப் போவினயம்.கொஞ்சம் உள்ளுக்குள்ள போனவுடனே என்ன கதைக்கிறதென்டு தெரியாமல் வாயில் வந்ததெல்லாத்தையும் கொட்டுறியள்.”என்றான்.குமாரின் அம்மாவுக்கு முகத்தில் செருப்பால் அடித்தது போல் இருந்தது வலியும் அவமானமும் கொதிப்புமாய் உயர்ந்தது உடலில்..கோபக் குவியாலாய் முகம் இறுகி கனத்து செவ்வானம் போல் சிவந்திருந்தது .டெய் பொன்னையான்! நாங்க வெல்வாயர் எடுத்து சீவித்தால் உனக்கு என்னடா செய்யுது.நாலு சல்லிக்கு பெறாத நாய் எங்களைப் பார்த்து கதைக்கிறியோ..?எங்கட குடுபத்தின்ர கௌரவம் என்ன..எங்கட ஊருலயே எங்கட்டத்தான் மெத்தை வீடு இருக்குது…வீட்டில் ஒன்னுக்கு இரண்டு வேலைகாரர் நீயெல்லாம் எங்கட கால் தூசிக்கு வரமாட்டாய் அதுக்குள்ள வாயைப் பார்…?”
குட்டானும் விடமால்,
“பேந்தென்ன குடும்ப கௌரவத்தை சொல்ல வேண்டும் பொஞ்சாதியும் புருசனும் புள்ளையும் சேர்ந்து குடிக்கிற இலட்சணத்தில”
அது எங்கட நாகரீகம்…எங்கட விருப்பம் அதுல உனக்கு என்ன செய்யுது…?”


அப்ப உன்னைப் போல பொன்னையன் மாதிரி முலைக்குள் கிடக்கவ சொல்லிறியல் விடிஞ்சா பொழுது பட்டால் வேலை வேலையெண்டு திரியிற நாய்…குடிக்கத் தெரியாது சிகரட் பத்தத் தெரியாது நாலு இடத்திக்கு போகத்தெரியாது நாலு பேரோட பழகத் தெரியாது நீயெல்லாம் ஆம்புளையா..?பொன்னையன்…பொன்னையன்…”
ஆண்மை பற்றி அவள் கொண்டிருந்த கோட்ப்பாடு கோபத்தோடு வெளிப்பட்டது.
மாயனா அமைதி விறாந்தையில் நிலவியது.

குசினிக்குள் நின்று நடக்கிற விடயங்களை அவதானித்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்த சாந்த கையில் இரண்டு கப்பு தேத்தண்ணீயைக் கொண்டு வந்து எனக்கும் குட்டானுக்கும் தந்துவிட்டு மீண்டும் குசினிப்பக்கம் போய்விட்டாள். இவ்வளவு நேரமும் குசினிக்குள் நின்ற சாந்த திடீரென ஏன் விறாந்தைக்கு வரவேனும்...? ஏதேனும் காரணத்திற்காகத்தான் அவள் தேத்தண்ணீயை தருவது போல் விறாந்தைக்கு வந்து போயிருக்க வேண்டுமென்று என் மனதிற்குள் மின்னலாய் வெட்டியது.ஆனால் சாந்த விறாந்தைக்கு வரும் போது அவளுடைய முகத்தில் கடுப்பான எரிச்சல் கவிந்து கிடந்ததை அவதானித்தேன்.
அவள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் குடும்பச் சுமை தின்று தீர்க்க@ மூச்சு விட நேரமற்று ஓடித்திரிவாள்.அன்பான கணவனும்@ அம்மா..அம்மா..என்று அன்பால் நனைக்கும் பிள்ளைகளும் அவள் இதயத்தை இதமாக வைத்திருந்தாலும் வீட்டில் இருப்பவர்களால் அவ்வப்போது ஏற்ப்படும் பிரச்சினைகளால் தூக்கம் இன்றி துக்கத்தில் ஆழ்ந்து போய்விடுவாள்.அப்படி எற்ப்படும் துயரத்தில் இருந்து உடனடியாக அவள் மீழவும் மாட்டாள்.சில வேளை ஒரு மாதத்துக் கூட நீண்டு போய் விடும்.அந்த நேரத்தில் யாருடனும் முகம் விட்டு பேசாமல் தனக்குள்ளேயே எல்லாவற்றையும் பூட்டி மனதிற்குள் மறைத்து வைத்து கடுப்பான எரிச்சலோடு உருகிச் செத்துக் கொண்டிருப்பாள்.அவளுடைய இயல்பே அப்படித்தான் என்பதை உணர்ந்த குமார் அதற்கேற்ப்ப வளைந்து கொடுப்பான்.

சுவரில் மாட்டப்பட்ட மணிக்கூடு ஒரு பறைவையின் சத்தம் போல் ஒலியெழுப்பி இரவு எழுமணியைக் காட்டிக் கொண்டு ஓய்ந்தது இளவேனிற் காலம் என்பதால் எழுமணியாகியும் இன்னும் இருட்டவில்லை.சூரியனின் மஞ்சள் நிற ஒளிக்கதிர்கள் வீட்டின் முன்பக்கத்திலுள்ள கண்ணாடியில் விழுந்து தெறித்துக் கொண்டிருந்தன.குமார் வழமையாக ஆறு மணிக்குள் வீட்டிற்கு வந்து சேருவான்.ஆனால் இன்று ஏழுமாணியாகியும் இன்னும் வரவில்லை.இன்று வெள்ளியரவு என்பதால் சில வேளை குடிவகை வாங்கப் போயிருக்கலாம். விறாந்தையில் நிலவி;க்கொண்டிருந்த அமைதியை கிழித்துக் கொண்டு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று மனம் கிளற,
“குட்டான் நடந்ததெல்லாம் மறந்து போட்டு வா சாப்பிடுவோம் என்று கூப்பிட்டுக் கொண்டு குமாரின் அம்மாவின் மீது என் பார்வை திரும்பியது.
“அம்மா என்னதான் இருந்தாலும் குட்டான் உங்களுடைய வயதுக்காவது மதிப்புக் குடுத்து கதைச்சிருக்க வேணும் அவன் அப்படி கதைக்காதது அவனுடைய பிழைதான் நான் ஒத்துக் கொள்கிறன்.அது போல நீங்களும் கொஞ்சம் நாகரீகமாக அவனோட கதைத்திருக்கலாம்.”நான் சொல்லி முடிப்பதற்குள்
ஏரிகின்ற நெருப்பில் எண்ணைய் ஊற்றியது போல் என் வார்த்தை இன்னும் அவள் கோபத்தை கிளறி விட்டுது போல..,
“இந்தக் குட்டானோட நாகரீகமாய் கதைக்கிறதா..?இப்பவே பெட்டியைக் கட்டிக் கொண்டு வீட்டை விடடுப்போகணும்..இல்லையெண்டால் நடக்கிறது வேற..”
குட்டான் ஒன்னும் பேசாமல் பறையாமல் இருக்க…குசினிக்குள் நின்ற வசந்தா டக்கென வெளிவிறந்தைக் விறு விறு என நடந்து வந்தாள்.முகத்தில் உணர்ச்சிக் குவியல் குமாரின் அம்மா சொன்ன வார்த்தையை உள்வாங்கி கடுப்பாகிப் போனாள்.மனம் இருப்புக் கொள்ள முடியாமல் கொந்தளித்தது. சூரியனையே சுட்டுப் பொசுக்கும் விழிகளின் பார்வை..நான் இந்த வீட்டின் அறைக்கு வந்த நாட்களிலிருந்து இப்படி வசந்த கோபம் கொண்டதை இது வரையில் நான் பாhத்ததே இல்லை.
“குட்டான்!எங்கட வீட்டிலே வாடகைக்கு இருக்கிறவன்..அவனை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்ல மாமி உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.அவங்க தாற வாடகையில்தான் வீடடுக்கு வாங்கிய கடன் கட்டுறம் அவங்க வீட்டை விட்டு போனால் எனக்குத்தான் அந்த கஸ்டம் தெரியும்.அவன் தானொன்டு தன்ர வேலையென்டு தன்ர பாட்டில இருக்கிற பொடியனை..”என்று நீட்டி முழங்கிக் கொண்டிருந்த வார்த்தைகள் முற்றுப் பெறுவதற்குள் குமாரின் அம்மா முந்திக் கொண்டு சீறிப் பாய்ந்தாள்.
“நீயேன்ரி அவனுக்காக வாக்காளத்து வாங்கிக் கொண்டு வாற..ஆட்டக்காறி..வாயைத்திறந்திட்டாள்.எனி வாய் குடுத்து தப்பயேலாது.”
“எனக்கு மற்ற ஆட்களைப் பற்றி கவலையில்லை..குட்டான் எங்களோடுதான் இருப்பான்.”
குமாரின் அம்மாவுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது
“அப்ப…இவள் அவனை வைச்சிருக்கிறாளாக்கும்”
அதன் பின் யாரும் எதுவும் கதைக்கவில்லை.விறாந்தை முழுவதும் அமைதி அப்பிக்கிடந்தது.
யன்னல் வெளியினுடே வானம் இருன்டு கொண்டு வந்தது.வெளிப்பக்கமாக கார் வந்து தரித்து நிற்க குமார் இறங்கி உள்ளே நடந்து வந்தான்.
(முற்றும்)
நன்றி:காலம்

No comments: